Friday, August 6, 2010

அதிரை அண்ணாவியார் - 1

அண்ணாவியார் புலவர்கள் - 1
ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார்

(மூன்றாம் செய்யது முஹம்மது)

அதிவீர ராமப்பட்டினம் - இது, கத்தும் கடல் சூழ் நாகையிலிருந்து தெற்கே சுமார் 120 கி.மீ தொலைவில் சேது பெருவழிச் சாலையில் அமைந்திருக்கும் கடற்கரை ஊர். அழைக்கப்படுவதோ அதிராம்பட்டினம்; சுருக்கப்பெயர் அதிரை. தமிழகத்தில் இசுலாம் நுழைந்தகாலத்திலிருந்தே இங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பயணிகள் அனைவரும் தங்கிச்செல்லும் பெருவழித் துறையாகவும் பழம்பெரும் துறைமுகப்பட்டினமாகவும் இலங்கியதாக புலவர் அஹ்மது பஷீர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இங்கு காதிர் முஹைதீன் கல்லூரியும், அரபி மதரஸாக்களும், வணிகப் பெருமக்களும் வாழுகின்ற ஊர் என்பது பெரும்பாலான இஸ்லாமிய மக்களுக்குத் தெரியுமே தவிர சிறந்த இசுலாமியப் புலவர் பெருமக்களை தமிழுக்கு அளித்த ஊர் என்று ஒரு சிலரைத்தவிர மற்றவர்களுக்குத் தெரியாது. அத்தகையோரில் அண்ணாவியார் (ANNAVIYAR) என்று அழைக்கப்படும் பெரும் சூஃபி புலவர் குடும்பங்கள் தமிழிலக்கிய உலகிற்கு பெரும்பங்காற்றிருக்கின்றனர்.

கடந்த இருபதாம் நூற்றாண்டு முழுவதும் வாழ்ந்தவர்கள் ஹாஜி கே. எஸ். செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்கள். இவர்கள் கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களின் பரம்பரையில் வந்தவர்கள். நவரத்தினகவி காதிர் முஹையித்தீன் அண்ணாவியார் அவர்களின் பேரரும் ஹபீப் முஹம்மது அண்ணாவியார் அவர்களின் மூத்தமகனும் ஆவார். 1902 ல் பிறந்து 1992 வரை தொன்னூறு ஆண்டுகாலம் வாழ்ந்தவர்கள். இவர்கள் தமிழ் இலக்கியத்திற்காக ஆற்றிய தொண்டுகள் எண்ணிலடங்கா. தம் முன்னோர்கள் எழுதி ஓலைச்சுவடிகளாக இருந்த பாடல்களை புத்தகவடிவில் ஆக்கியவர்கள். தம்முன்னோர்களைப் போலவே சிறந்த தமிழறிஞர், பாடும் திறன் பெற்ற பாவலர், இறையருள் பெற்ற தொண்டர், எல்லோரிடமும் இனிமையாகப் பழகும் பண்பாளர். இவைகளுக்குமேல் மிகச்சிறந்த மனை நூல் நிபுணர்.

தாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற சீறிய எண்ணம் கொண்ட இம்மூதறிஞர் தம் முப்பாட்டனார் அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் மற்றும் அவர்கள் வழிதோன்றல் புலவர்கள் அனைவர்களது பாடல்களையும் ஓலைச்சுவடியிலிருந்து நூல் வடிவமாக மாற்றி நம் கையில் தவழவிட்டவர். "சந்தாதி அசுவகம்" - இது 4300 பாடல்களைக் கொண்ட தொகுப்பு இதை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மனமுவந்து பெற்று வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல் பாட நூலாகவும் ஆக்கியுள்ளது. இவர்களது சேவையைப் பாராட்டி சென்னை சீதக்காதி அறக்கட்டளை பொற்கிழி அளித்து பெருமைப் படுத்தியது. அண்ணாவியார் புலவர்களை உலகுக்குக் காட்டிய உத்தமர் இவர்களே ஆவார்.

இவர்களின் அறிய முயற்சியால் வெளிவந்த நூற்கள்:

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "அசுவமேத யாகம், சுப்ரமணியர் பிரசன்னப் பதிகம்."

ஜீவரத்தின கவி செய்யது மீரா லெப்பை அண்ணாவியார் எழுதிய "மதீனக்கலம்பகம், மகுடி நாடகம்."

சொர்ண கவி நெய்னார் முஹம்மது பாவா எழுதிய "மழைப் பாட்டு, செய்கு தாவூதொலி பிள்ளைத்தமிழ், விடுகதை பாடல்கள்."

நவரத்தினகவி காதிர் முஹையிதீன் அண்ணாவியார் எழுதிய "ஃபிக்ஹு மாலை."

செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "ஆலிம் சாஹிபு சமரசகவிகள், நாகூர் புகைரத வழிச்சிங்கார ஒயிற்சிந்து."

வெளிவர இருக்கும் நூற்கள்:

அமிர்த மதுரகவி செய்யது முஹம்மது அண்ணாவியார் எழுதிய "அலி நாமா, நூறு நாமா, மகாபாரத அம்மானை, வாட்சா ராவுத்தர் திருமண பவனி."

சொர்ணகவி நெய்னார் முஹம்மது பாவா எழுதிய "கொம்புரவ்வு இல்லாத வண்ணம், பாசிப்பட்டணம் வழிநடைச் சிந்து."

இன்னும் வரும்.

நன்றி: அண்ணாவியார் பேரர்கள் அப்துல் வாஹித் மற்றும் அஷ்ரஃப் அலி, அதிராம்பட்டினம்.

குறிப்பு: எனக்கு கிடைத்த செய்திகளை வைத்து ஹாஜி செய்யது முஹம்மது அண்ணாவியார் அவர்களைப் பற்றி எழுதியுள்ளேன். இவர்கள் ஆற்றிய தொண்டுக்கள் நிறையவே உள்ளன. இவர்கள் அமிர்தகவியின் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர்கள். தாம் பாட்டனார் எழுதிய கவிதைத் தொகுப்புக்கள் அனைத்தும் ஒலைச் சுவடிகளாகவே உள்ளன. அவற்றை

சேகரித்து, பாதுகாத்து வைத்துள்ளார்கள். அவற்றில் சில புத்தகவடிவமாக ஆக்கப்பட்டதைத் தவிர வேறு சிலவற்றை தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்திற்கு இலவசமாக அளித்துள்ளார்கள். அவற்றுள் சந்தாதி அசுவகம் அல்லாமல் வேறு எவையெல்லாம் தமிழ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது என்று தெரியவில்லை. இவர்களைப் பற்றிய செய்தி "உலக வெற்றி முரசு" என்ற பத்திரிக்கையில் கடந்த 14-2-2006ல் வெளிவந்திருந்தது. அதை தம்பி ஆபிதீன் தனது வலைப்பதிவில் வெளியிட்டுள்ளார். இவர்களைப் பற்றிய குறிப்புக்களை அவர்கள் உறவினரிடம் தொடர்பு கொண்டு கேட்டுள்ளேன். அவை கிடைத்ததும் இத்துடன் சேர்க்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஹமீது ஜாஃபர்

துபை

0 Comments:

Post a Comment



Subscribe to Post Comments [Atom]

Thursday, August 5, 2010

'நம்ம ஊரைப் போல வருமா'

'எந்த ஊருக்கு சென்றாலும் அது நம்ம ஊரைப் போல வருமா' எங்கயோ கேட்ட வரிகள் தான் இந்த கட்டுரையின் வேர். நம்ம ஊர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம்.

காதிர் முகைதீன் கல்லூரி நம்ம ஊருக்கு முக்கிய அடையாளம் நாகப்பட்டினம் முதல் பேராவூரணி அறந்தாங்கி வரை மாணவர்கள் படித்த கல்லூரி பழமைவாய்ந்தது.அந்த வேப்ப மர சூழலும்,இயற்கையின் பசுமையும் அக் கல்லூரியின் வாயிலை அலங்கரிக்கும்.நான் அங்கே படிக்கவில்லையென்றாலும்(ஏன் படிக்கவில்லை என்றால் அதற்கு ஒரு (அ)நியாயமா ஒரு பதிவு போடனும் ஏன் வம்பு) கடல்காற்றின் சுகமும்,பாசாங்கான எங்கள் ஊரின் பேச்சு வழக்கும் வார்த்தைகளில் விவரிக்க இயலாது.

கடலை பார்த்த ரயில் நிலையம்.அந்த ரயில் நிலையத்தில் ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட கவலையும் தணியும்.அப்பேர்ப்பட்ட ரம்மியமான இயற்கை வலையில் அமைந்தது. இதை நான் பெருமையாகவே சொல்வேன். காலை 8 மணிக்கு ஒரு ரயிலும்,மாலை 4 மணிக்கு ஒரு ரயிலுமாக காரைக்குடி-மயிலாடுதுறை ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்கள் எங்கள் ஊரையும் தொட்டுச் செல்லும். முன்பு காரைக்குடி- சென்னை இடையே ஒடிக்கொண்டிருந்த கம்பன் எக்ஸ்ப்ரஸ் ரயிலும் எங்கள் ஊரின் வழியே சென்று கொண்டிருந்தது.அதுக்கு மூடுவிழா நடத்தி சில வருடங்கள் ஆகி விட்டது.

சரி விஷயத்துக்கு வருவோம்.இந்த ரயில்நிலையம் வந்து படிக்காத மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு எங்கள் ஊர் மாணவர்களின் படிப்புக்கும், இந்த ரயில் நிலையத்துக்கும் பிணைப்பு அபரிதமானது. பல சமயங்களில் வாத்தியார்கள் முன்னிலையில் வகுப்பறையாக உருவெடுத்த பெருமை இந்த ரயில் நிலையத்தையேச் சாரும். வயதான முதியோர்களும், இளைஞர்களும் வயது வித்தியாசமின்றி வந்து போகும் இடமாக இருந்தது எனக்கு தெரிந்தவரையில் ரயில்நிலையம்தான்.

வருடா வருடம் மே அல்லது ஜூன் மாதங்களில் ரயில் நிலையத்திற்கு மிக அருகாமையில் ஐ.டி.ஐ. விளையாட்டு மைதானத்தில் மாவட்ட, மாநில அளவிளான கால்பந்து போட்டி நடக்கும்.அந்த ஒரு மாதம் முழுவதும் மாலை நேரங்களில் எங்களின் ஊரின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என சொல்லலாம். 'நினைத்தாலே இனிக்கும்' என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இந்த கால்பந்து தொடர் போட்டியை குறிப்பிடலாம். அந்த தொடர் போட்டி ஆரம்பமாகும் நாளில் இருக்கும் சந்தோஷம்,அதன் நிறைவு நாளிலிருக்கும் கவலை கல்யாணம் முடிஞ்சு பத்தே நாள்'ல வெளிநாட்டுக்குப் போகிற மணமகனின் கவலைக்கு ஈடானுது. அவ்வளவு தூரம் எங்கள் மக்களோடு ஒன்றிப் போன விளையாட்டு கால்பந்து.

அவிச்ச அல்லது அவிக்காத கடலையை சாப்பிட்டுக்கிட்டு இந்த டீம் கோல் போடுமா, அந்த டீம் ஜெயிக்குமா பக்கத்தில் இருப்பவரிடம் பேசிக்கொண்டு ஆர்வத்துள்ளலில் எவ்வித கவலையும் இன்றி இருக்கும் அந்த நிமிடம் வாழ்நாள் முழுவதும் வராதா(வராது!)என்று ஏங்கிய காலமெல்லாம் உண்டு.

ஆக்கம் - அஹ்மது இர்ஷாத்